நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் வடமாகாணத்தில் கடல் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய கடற்பரப்புகளில் நாளாந்தம் மீன்பிடித்தல் இடம்பெற்று வருகின்ற போதிலும், கடந்த சில நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீன்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கடற்தொழிலாளர்களுக்கு எரிபொருளுக்கு அதிக பணம் செலுத்த நேரிடுவதன் காரணமாக மீன்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக கடற்றொழில் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதிகமாக விற்பனையாகும் மீன்கள் 2000 ரூபாவை எட்டியுள்ளதாகவும், இறால் மற்றும் நண்டு 1600 – 1800 ரூபாய்க்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்ய நேரிட்டுள்ளதாகவும் மீன் விற்பனையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
குறித்த மீன்கள் இதற்கு முன்பு ஒரு கிலோ 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இரட்டிப்பு விலை அதிகரிப்பு என்பது தாங்கிக் கொள்ள முடியாததெனவும் வட மாகாண மக்கள் தெரிவித்துள்ளனர்.