சேருவில – தங்க நகர் யுவதியின் படுகொலை தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (02) விசாரணைக்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் முகமட் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த ஏழு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் 3ஆம், 6ஆம் எதிரிகளுக்கு பிணை விண்ணப்பம் கோரி சமர்ப்பணம் செய்திருந்தனர். குறித்த விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி, அந்த எதிரிகள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை எனவும் பிணை விண்ணப்பம் ஆனது மேல் நீதிமன்றத்தினால் பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்து பிணை விண்ணப்பத்தை நிராகரித்து குறித்த சந்தேக நபர்களுக்கு மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்க நகரைச் சேர்ந்த நரேஷ் குமார் வினோதினி என்ற 25 வயதான இளம் பெண்ணின் சடலம் கிளிவெட்டி கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டு இருந்தது. கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த யுவதியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குறித்த யுவதியின் காதலன், அவரது தந்தை, சகோதரி, சிறிய தந்தை, வீட்டு வேலைக்காரன் மற்றும் ஜே.சி.பி வாகனத்துடன் தொடர்புடைய இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கானது கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு தொடுனரான மூதூர் பொலிஸார், கைது செய்யப்பட்ட ஏழு பேரில் நான்கு பேரை குறித்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சமர்ப்பணம் செய்திருந்தனர்.
இதில் திருப்தி கொள்ளாத நீதிமன்றம் குறித்த வழக்கை திருகோணமலை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றியிருந்தது குறித்த ஏழு நபர்களுக்கும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக